Sunday, May 11, 2014

குடும்ப வன்முறை என்றால் என்ன?


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                         

                                                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                                                     http://dinamorusattam.blogspot.in

குடும்ப வன்முறை என்றால் என்ன?

குடும்ப வன்முறை: 

உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் குடும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப்பது, தள்ளுவது, கையில் கிடைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல்லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்முறை. இது கணவன் - மனைவி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமென்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப்படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப்படுத்துவது போன்றவை மன ரீதியான வன்முறைகள். தேவையில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்தமிடுவது, கட்டியணைப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல்வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது? 




இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையால் துன்புறுத்தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலுக்கு வந்துவிட்டது.

இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தாலோ அல்லது அவமானப்படுத்தி துன்புறுத்தினாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறை தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண்டும் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக்கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது.

‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத்தைப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற்றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண்களும் பெண்களுக்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?

நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகின்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடைமுறையில் வெளியே தெரியாதவாறு இயங்குகின்றன. குழந்தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களிலும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போலவே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்டமும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

இதற்கு என்ன காரணம்?

உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத்தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர்களது வளர்ப்பு முறையும் இடம் தரவில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவதில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அதனால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

0 comments:

Post a Comment